மதுரை நாயக்கர்கள் 3
மதுரை நாயக்கர்கள் #3 – அரசின் தோற்றம் (தொடர்ச்சி) விஜயநகரப் பேரரசின் அரசப் பிரதிநிதிகளாக தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தவர்கள் எப்போது நாயக்கத்தானம் பெற்று அமர நாயக்கர்களாகப் பதவி உயர்வு அடைந்தனர் என்பது பற்றி வரலாற்று அறிஞர்களிடையே பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சியின் போது மதுரையில் பணிபுரிந்தவரும் ‘The Madura Country’ என்ற புத்தகத்தில் மதுரை வரலாற்றின் பல பகுதிகளை ஆவணப்படுத்தியவருமான நெல்சன், பொயு 1559ல் தான் மதுரை நாயக்கராக விஸ்வநாத நாயக்கர் பொறுப்பேற்றதாகக் குறிப்பிடுகிறார். பாண்டியர் வரலாற்றுக் குறிப்புகளிலிருந்தும் ம்ருத்யுஞ்சய ஓலைச்சுவடிகளில் உள்ள குறிப்புகளின் அடிப்படையிலும் இந்த முடிவுக்கு அவர் வந்ததாகவும் நெல்சன் தெரிவிக்கிறார். வி. ரங்காச்சாரி என்ற ஆய்வாளரும் நெல்சனின் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு பொயு 1559ம் ஆண்டே மதுரை நாயக்கர் வம்சம் தோன்றிய ஆண்டு என்று கூறுகிறார். ஆனால் இதற்கான ஆதாரமாக அவர் நாகமர் கிருஷ்ணதேவராயருக்கு எதிராக நடத்திய கிளர்ச்சியை அவர் எடுத்துக்கொள்கிறார். அதாவது நாகம நாயக்கர் பொயு 1557ல் விஜயநகர அரசை எதிர்த்துப் புரட்சி செய்திருக்க வேண்டும்...